தமிழ்த் தேசியத்தின் எழுச்சிக்கும் தமிழ் மக்களின் அபிலாசைகளுக்குமா குரல் கொடுத்த மகேஸ்வரன் !

Monday, January 7, 2008 - - 2 Comments


ஜக்கிய தேசியக்கட்சி மூலமாக அரசியலில் பிரவேசித்த தியாகராசா மகேஸ்வரன் கட்சியின் சிங்கள பெரும்பான்மைவாத கொள்கையில் இருந்து விலகி தமிழ்மக்களுடைய அரசியல் அபிலாசைகளை பிரதிபலிக்கும் வகையில் செயற்பட்டு வந்தவர்.
குறிப்பாக தமிழ்த் தேசியத்தை ஆதரித்து வெளிப்படையாக தனது கருத்துக்களை பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் பாராளுமன்றத்திற்கு வெளியேயும் வெளிப்படுத்தி வந்த மகேஸ்வரன் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் கொள்கைக்கு மாறாக அவசர காலச்சட்டத்திற்கு எதிராக முதன் முதலாக பாராளுமன்றத்தில் வாக்களித்த தமிழ் உறுப்பினராவார். அதன் பின்னர்தான் பெரும்பான்மைவாத கட்சியில் அங்கம் வகிக்கின்ற சில தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களிக்க ஆரம்பித்தனர். சிங்கள பெரும்பான்மை வாதக்கட்சியின் மூலமாக பாராளுமன்றத்திற்கு தெரிவானாலும் தமிழ்த் தேசியத்தின் எழுச்சிக்கும் தமிழ்மக்களுடைய அரசியல் அபிலாசைகளுக்கும் ஆதரவாக குரல் கொடுக்கவேண்டும் என்ற கோட்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார்.
2000 ஆம் ஆண்டு முதல் முறையாக யாழ். மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு அதிகப்படியான வாக்குகளுடன் பாராளுமன்றத்திற்கு தெரிவானவர். 48 ஆண்டுகளின் பின்னர் முதன் முறையாக ஐக்கிய தேசியக்கட்சி சார்பாக யாழ்ப்பாணத்தில் இருந்து தெரிவான உறுப்பினராக விளங்கினார். தமிழ் மக்களுடைய போராட்;டம் அகிம்சைப் போராட்டமாக ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து யாழ்ப்பாணம் உட்பட வடக்கு கிழக்குப் பகுதியில் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்தோ அல்லது சிறிலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்தோ அல்லது அந்தக்கட்சிகளில் அங்கத்துவம் பெற்றோ பொதுத்தேர்தல்களில் தமிழர்கள் எவரும் போட்டியிடுவதில்லை. ஏனெனில் இனரீதியான அரசியல் கட்சிகள் தோற்றம் பெற்றமை அதற்கு காரணமாகும். மேற்படி இருகட்சிகளுமே சிங்கள பெரும்பான்மைவாதத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்பட்டு வந்தன. இதன் காரணமாகவே வடக்கு கிழக்கில் தமிழர்கள் தங்களுக்கென கட்சி அமைத்து பொதுத்தேர்தல்களில் போட்டியிட்டார்கள்.
48 ஆண்டுகளின் பின்னர் தவிர்க்க முடியாத சில காரணங்களினால் ஐக்கிய தேசியக்கட்சி சார்பாக யாழ்ப்பாணத்தில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் வாக்களித்தனர். அவ்வாறான வாக்களிப்பில் மகேஸ்வரன் யாழ்ப்பாணமக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானார். 2000 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி கொழும்பில் முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தை புறந்தள்ளி விட்டு மகேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் தனியான தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் விடுதலைப் புலிகளை ஏகபிரதிநிதிகளாக ஏற்று அரசாங்கம் பேச்சு நடத்தவேண்டும் என்பதும் தமிழ் ஈழக் கோரிக்கையும் ஏற்கும் வகையிலான நிலைப்பாடுகளும் அந்த விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தன. மிகத்துணிவுடன் கட்சியின் சம்மதம் இன்றியே அந்த நிலைப்பாடுகளை விஞ்ஞாபனமாக முன்வைத்துப் போட்டியிட்ட மகேஸ்வரன் வெற்றி பெற்றதும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி தனது பாராளுமன்ற கன்னிப்பேச்சை வெளிப்படுத்தியிருந்தார்.
கொழும்பிலும் அல்லது கிழக்கு மாகாணத்தில் உள்ள சில மாவட்டங்களிலும் சிங்கள பெரும்பான்மைவாதக்கட்சிகளுடன் சேர்ந்து பொதுத்தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவான தமிழ் உறுப்பினர்கள் சிலர் தங்களுடைய பதவிகளை காப்பாற்றிக்கொள்வதற்காக தமிழர்களுடைய அபிலாசைகளை மறந்து தாங்கள் சார்ந்த கட்சிகளின் நிலைப்பாடுகளையே முன்வைத்து பாராளுமன்றத்தில் பேசுவார்கள். ஆனால் தொடர்ந்து ஏழு ஆண்டுகள் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பாக பாராளுமன்ற உறுப்பினராக அங்கம் வகித்த மகேஸ்வரன் ஐக்கிய தேசியக்கட்சியின் நிலைப்பாட்டிற்கு சாதகமாக ஒருபோதும் பேசியது கிடையாது. தமிழர்களின் பிரச்சினை தீர்க்கப்படவில்லையானால் தமிழ் ஈழம்தான் ஒரேதீர்வு என்று பாராளுமன்றத்தில் உரக்கக்கூறியிருந்தார்.
2001 ஆம் இடம்பெற்ற பொதுத்தேர்தலின் போது மகேஸ்வரன் ஐக்கிய தேசியக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு மாறாக தனிப்பட்ட முறையில் முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனம் தமிழ் ஈழத்தை ஆதரித்திருந்தது. அமோக வெற்றி பெற்ற மகேஸ்வரன் மீண்டும் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தார். ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கத்தை அமைத்துக்கொண்டது. அமைச்சுப் பதவியை பெற்றுக்கொண்ட மகேஸ்வரன் தனது தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை தொடர்ந்தும் வலியுறுத்தி வந்திருந்தார். நோர்வேயின் ஏற்பாட்டுடன் சமாதான பேச்சுவார்த்தைகளும் ஆரம்பிக்கப்பட்டன. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஜே.வி.பி போன்ற கட்சிகள் சமாதானப் பேச்சுக்களுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தன. அப்போது எதிர்க்கட்சியின் பிரதான உறுப்பினராக இருந்த ஜெயராஜ் பெர்ணாண்டோ புள்ளே (தற்போது அரசாங்கத்தின் பிரதம கொறடாவாகவும் அமைச்சராகவும் பதவி வகிக்கின்றார்) மகேஸ்வரன் முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து தமிழ் ஈழத்தை வழங்குவதுதான் ஐக்கிய தேசியக்கட்சியின் நிலைப்பாடா என்று அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவிடம் (தற்போதைய எதிர்க்கட்சித்தலைவர்) கேள்வி தொடுத்திருந்தார். அதற்குப் பதிலளித்த ரணில் விக்கிரமசிங்க தமிழர்களுடைய பிரச்சினை தீர்க்கவேண்டியது எந்தவொரு அரசாங்கத்தினதும் கடமை என்று கூறியதுடன் எந்தவொரு உறுப்பினர்களின் உணர்வு வெளிப்பாடுகளுக்கு எதிராக பேசுவது அரசியல் நாகரீகம் அல்ல என்றும் குறிப்பிட்டிருந்தார். அதேவேளை புலிகளுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகளின்போது ஏற்பட்ட இணக்கப்பாடுகளை நடைமுறைப்படுத்தாமை தொடர்பாக அமைச்சராக இருந்துகொண்டே ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கத்தையும் அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்காவையும் காரசாரமாக விமர்சித்துவந்தார்.
2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் கொழும்பில் போட்டியிட்ட மகேஸ்வரன் தேர்தல் பிரசாரத்தின்போது துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி காயமடைந்திருந்தார். கொழும்பு மாவட்ட தேர்தல் வரலாற்றிலேயே என்றும் இல்லாவாறு 58,800 வாக்குகளைப் பெற்று கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார். துப்பாக்கிச்சூடு பட்டதும் அரசியலை விட்டு ஒதுங்காமல் தொடர்ந்தும் தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக நின்று செயற்பட்ட மகேஸ்வரன் கொழும்பிலும் சுற்றுப்புறங்களிலும் 3,000 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் கைது செய்யப்பட்டபோது அரசாங்கத்தை நேரடியாக கண்டித்திருந்தார். தடுப்பு முகாம்களுக்கு கைதிகளின் உறவினர்களை அழைத்துச் சென்றிருந்தார். பாராளுமன்றத்தில் விசேட பிரேரணை ஒன்றை சமர்ப்பித்து தமிழர்கள் மீதான கைது நடவடிக்கைகள் என்பது திட்டமிட்ட நடவடிக்கை என்று கண்டித்திருந்தார். பாராளுமன்றத்தில் அவர் நிகழ்த்துகின்ற ஒவ்வொரு உரையும் தமிழ்த் தேசியத்தின் நியாயப்பாடுகளை வெளிக்கொணருவதாகவே அமைந்திருந்தன. அரசாங்கத்தின் பேரினவாத நடவடிக்கைகளையும் அம்பலப்படுத்தியிருந்தன.
இறக்கும்வரை தமிழ்த் தேசியத்தையே உச்சரித்துக்கொண்டிருந்த மகேஸ்வரன் தனது மூன்று பிள்ளைகளையும் மனைவியையும் விட்டுப் பிரிந்தமையானது அவரது குடும்பத்திற்கு மாத்திரமல்ல அனைத்து தமிழர்களையுமே கவலையில் ஆழ்த்தியுள்ளது. வருடப்பிறப்பன்று மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதற்கேற்ப சிவன் ஆலயத்திலேயே அவரது உயிரைப் பறிக்கும் இயமன் துப்பாக்கி வடிவில் வந்துவிட்டானா என்ற ஆத்திரத்துடனும் இந்த அக்கிரமங்களை சர்வதேசம் தட்டிக்கேட்காதா என்ற ஆதங்கத்தோடும் தமிழர்கள் தமது மனக்குமுறல்களை வெளிப்படுத்துகின்றனர்.
ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ் வரிசையில் மகேஸ்வரனும் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி மரணமானமை பாராளுமன்ற ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கியதுடன் ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு இருந்த அற்பசொற்ப நம்பிக்கையும் புத்தாண்டின் ஆரம்பத்திலேயே அற்றுப்போய்விட்டது. வரவு-செலவு தட்டத்திற்கு எதிராக வாக்களித்தமையினாலும் தமிழர்களுக்கு எதிரான மனிதவுரிமைகளுக்கு எதிராக பேசியமையினாலும் அவருக்கு வழங்கப்பட்டிருந்ந பாதுகாப்பு கடந்த இரு வாரங்களுக்கு முன்னர்தான் இரண்டாக குறைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மகேஸ்வரன் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டமையானது தமிழ் மக்கள் உட்பட சகல தரப்பினருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அரசாங்கம் பதில்கூற கடமைப்பட்டுள்ளது.
நன்றி: வீரகேசரி (02.01.08)

பூர்வீகங்கள் பறிபோகும் பரிதாபம் !

Friday, September 7, 2007 - - 1 Comments

சிறீலங்கா சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து சிறீலங்காவை ஆண்ட சிங்கள அரசுகள் கிழக்கைச் சிங்கள மயமாக்குவதைத் தமது முதன்மையான குறிக்கோளாகக் கொண்டு செயற்பட்டு வந்திருக்கின்றன என்பது எமக்கு வரலாறு தெளிவாக வழங்கும் செய்தி!

இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை முன்னின்று செயற்படுத்திய பௌத்த பிக்குகளுக்கு எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்களிடமிருந்து பூரண ஆதரவு கிடைத்தே வந்தது. பல தசாப்பதங்களாகக் கிழக்கை ஆக்கிரமிக்க முயலும் சிங்களத்தின் மற்றொரு முயற்சிதான் தற்போதைய தொப்பிக்கல ஆக்கிரமிப்பு!

தனது நீண்டகாலத் திட்டம் நிறைவேறியுள்ளதாக சிங்களம் மகிழ்ச்சி அடைந்ததன் வெளிப்பாடுதான் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட வெற்றி விழாக்களும், களியாட்டங்களும் என்ற விடயம் பலர் அறியா உண்மை! மட்டுமாவட்டத்தின் பொலனறுவைக்கான எல்லை மன்னம்பிட்டி ஆறுவரை நீண்டிருந்தது. சிங்களத்தின் நாசகாரத் திட்டத்திற்கு அமைய இந்த எல்லைகள் மாற்றியமைக்கப்பட்டு, வெலிக்கந்தையிலிருந்து மன்னம்பிட்டி வரையிலிருந்த பூர்வீகத் தமிழ்க் கிராமங்கள் பொலனுறுவையுடன் இணைக்கப்பட்டுச் சிங்கள மயமாக்கப்பட்டன. இவ்வாறு இணைக்கப்பட்ட எமது தமிழ்க் கிராமங்களான, கருப்பளை, முத்துக்கல், சொருவில், மன்னம்பிட்டி போன்றவற்றிற்குச் சிங்களப் பெயர்களைச் சூட்டி முழுமையான சிங்கள மயமாக்கியுள்ளனர். இயற்கையாகவே மிகவும் செழிப்பான விவசாய நிலங்கள் கொண்ட அப்பகுதியில் தற்போதும் மிகவும் சிறுபான்மையாகத் தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். நிர்வாக ரீதியாகத் தமிழரின் நிலங்களை அபகரித்த சிங்களம், மட்டு மாவட்டத்திற்குள்ளும் தமது நில ஆக்கிரமிப்பு வேலைத் திட்டத்தைத் தொடர்வதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக மட்டுமாவட்டத்தின் கள்ளிச்சை வடமுனைப் பகுதியிலும் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்வதற்குப் புத்த பிக்குகள் மூலமாகச் சிங்களம் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டது.
அக் காலகட்டத்தில் மட்டுமாவட்டத்தில் தமிழ் உணர்வுடன் அரச அதிகாரிகளாகக் கடமையாற்றியவர்களாலும், தமிழ் உணர்வாளர்களாலும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக சிங்களக் குடியேற்றத் திட்டத்திற்குப் பெரும் பின்னடைவுகள் ஏற்பட்டன. இத் தமிழ் உணர்வாளர்கள் மட்டுநகரில் இருந்த படித்த தமிழ் வாலிபருடன் தொடர்புகளை ஏற்படுத்தி அவர்களுக்கு இங்கு பண்ணைகளை அமைத்துக் கொடுத்து இப்பகுதியில் அவர்களைக் குடியேற்றி அக்காலத்திலேயே எமது பூர்வீக நிலங்களைப் பாதுகாத்தனர். தமிழ்த் தேசியம் எழுச்சி பெற்றிருக்காத அக் காலகட்டத்திலேயே தமிழ் உணர்வாளர்களால் பாதுகாக்கப்பட்ட கள்ளிச்சை வடமுனைப் பகுதித் தொடர்காடுகளுடன் இணைந்த மலைத் தொகுதிகள்தான் அவற்றின் வடிவங்கள் கொண்டு தொப்பிக்கல் மலை, கெவர்மலை, குடும்பிமலை, கார்மலை என்ற பெயர்களால் அழைக்கப்பட்டு வருகின்றன. மியான்குளம், ஊத்துச்சேனை, நாப்பதாவில், அலியாலுடை, புல்லுட்டு மானோடை, மேசைகல்திடல் போன்ற பல கிராமங்கள் வளம் செழிக்கும் விவசாய நிலங்களாகும்.
1977 யூலையில் சுதந்திரக் கட்சியிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றிய ஐக்கிய தேசியக் கட்சியினர் தாங்களும் தமிழ்மண் அபகரிப்பில் சளைத்தவர்கள் அல்ல என்பதைக் காட்டுவதற்கு மாகாவலித் திட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு தமிழர் நில அபகரிப்பில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினர் தொப்பிக்கல் மலைப் பகுதியிலிருந்து சில மைல்கள் தூரத்திற்குள் மதுறுஓயா நீர்த்தேக்கம் ஏற்படுத்தப்பட்டு அதைச் சூழவுள்ள பிரதேசங்கள் ஏ, பீ, சீ என மூன்று பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன. ஏற்கெனவே சிங்கள மயமாக்கப்பட்ட பிரதேசங்கள் ஏ வலயம் எனவும், வாகரையிலிருந்து வடமேற்காகக் காடும் காடுசார்ந்த நிலங்களும் பீ வலயம் எனவும், தொப்பிக்கல் - அதனைச் சூழவுள்ள பிரதேசங்கள் சீ வலயம் எனவும் பிரிக்கப்பட்டன. இவ்வாறு வலயங்களாகப் பிரித்து அபிவிருத்தி என்ற போர்வையில் கள்ளிச்சை வடமுனை உட்பட பல தமிழ்க் கிராமங்களில் மீண்டும் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ள சிங்கள இனவாதம் முயற்சிகளை மேற்கொண்டது.
இம்முறை மேற்கொள்ளப்பட்ட குடியேற்ற முயற்சிகளை மன்னம்பிட்டிக்கு அருகிலிருந்த ‘திம்புலாகல’ விகாரையிலிருந்த பௌத்த பிக்குவான ‘லீலானந்ததேரோ’ என்பவரே முன்னின்று செயற்படுத்தி வந்தார். இவர்களால் மேற்கொள்ளப்பட்ட குடியேற்ற முயற்சிகளுக்கு அங்கு வாழ்ந்த தமிழ் மக்களால் தீவிர எதிர்ப்புக் காட்டப்பட்டது. தமிழ் மக்களின், குடியேற்றத்திற்கு எதிரான தீவிர எதிர்ப்பைக் கண்ட ஆளும் வர்க்கம் தமிழ் மக்களுக்கும், பொலனறுவை, மட்டுமாவட்ட அரச அதிகாரிகளுக்குமான ஒரு ஒன்றுகூடலை ஏற்பாடு செய்தனர். இக்கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழர்கள், குடியேற்றங்களுக்குத் தமது தீவிர எதிர்ப்பைக் காட்டியதால் குடியேற்றங்களை நிறுத்துவதற்கு அரச அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இச் செய்திகளைக் கேள்வியுற்று ஆத்திரமும் ஆவேசமும் கொண்ட லீலானந்த தேரர், தொப்பிக்கல் மலை உச்சியில் ஏறிநின்று பார்க்கும்போது கண்ணுக்கெட்டிய பிரதேசங்கள் யாவும் சிங்களக் கிராமங்களாகவும் சிங்கள மக்களாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் எனது மிகப் பெரிய கனவு என்றும், அதை யார் தடுத்தாலும் நிறைவேற்றியே தீருவேன் என்றும் சபதம் எடுத்துக் கொண்டாராம். இந்த விருப்பமானது ஒரு லீலானந்த தேரரின் தனிப்பட்ட விருப்பமல்ல! முழுச் சிங்களத் தலைமைகளின் விருப்பமும் இதுவேயாகும். இச் சம்பவங்களைத் தொடர்ந்து இப் பிரதேசங்களில் அதிக அளவிலான தமிழர்களைக் குடியேற்றும் வேலை தமிழ் உணர்வாளர்களால் மேற்கொள்ளப்பட்டது.
இக் காலப் பகுதியில் பட்டிருப்புத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரான கணேசலிங்கம் தமிழ் மக்களுக்கு விடுத்த வேண்டுகோளில் வடமுனையில் துறைநீலாவணை மக்கள்போல வீரஞ் செறிந்த மக்களைக் குடியேற்றினால்தான் இப் பகுதிகளையும் சிங்களவரிடமிருந்து பாதுகாக்க முடியும் என்று கேட்டுக்கொண்டார். 1958 ம் ஆண்டுக் காலத்தில் தமிழர்களைத் தாக்க வந்த சிங்களக் காடையர்களை அடித்து பின்னர் காடையர்களுக்கு துனையாக வந்த இராணுவத்தினரையும் அடித்து விரட்டிக் கிழக்கு மண்ணின் இன மானத்தையும் வீரத்தையும் உலகறியச் செய்தவர்கள் துறைநீலாவணை மக்கள் என்பது யாரும் மறுக்கமுடியாத உண்மை!
1978ன் பிற்பகுதியில் தமிழீழத் தேசிய விடுதலைக்கான போராட்டம் எழுச்சியுறத் தொடங்கிய காலகட்டத்தில், தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் மட்டு அம்பாறை மாவட்டத்திற்கான முதலாவது இரகசியப் பணை;ணையை தொப்பிக்கல் மலைப் பகுதியிலேயே அமைத்தார். தொப்பிக்கல் மலையும் அதனைச் சூழவுள்ள பகுதிகளினதும் அரசியல், சமூக கேந்திர முக்கியத்துவத்தினை அன்றே உய்த்தறிந்ததால்தான் தலைவர் அவர்கள் மாவட்டத்திற்கான முதல் பண்ணையை இப் பிரதேசத்தில் அமைத்திருக்கின்றார். 1983ம் ஆண்டுக்குப் பின்னர் தீவிரமடைந்த தமிழர் தேசிய விடுதலைப் போராட்டத்தில், மட்டுமாவட்டத்தில் ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத் தாக்குதல், நிர்மலா நித்தியானந்தன் சிறையுடைப்பு போன்ற பல தாக்குதல்கள் இப் பகுதிகளிலிருந்துதான் செயற்படுத்தப்பட்டன. 1984ல் லெப்படினன் பரமதேவாவின் வீரச்சாவும் அதைத் தொடர்ந்து மட்டுமாவட்டத்தின் பாதுகாப்பு, வெளிநாடுகளில் பயிற்சிபெற்ற விசேட அதிரடிப்படையினரிடம் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்தும், போராட்டச் செயற்பாடுகள் மிகவும் மந்த நிலைக்குச் சென்றன. நகர்ப்புறத்திலே நிலைகொண்டிருந்த அதிரடிப்படையினர் தொப்பிக்கல் நோக்கிப் பல நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இவ்வாறு மிகவும் மந்த நிலையிலிருந்த மட்டு மாவட்ட போராட்டச் செயற்பாடுகளைச் சீர்செய்வதற்காகத் தேசியத் தலைவர் அவர்களால் பல புதிய அணிகள் மாவட்டத்தில் களமிறக்கப்பட்டு அனைத்துப் போராளிகளையும் ஒருங்கிணைத்து மீண்டும் புதிய உத்வேகத்துடன் போராட்டம் நகர்த்தப்பட்டதுஏறாவூர் பொலிஸ்நிலையத் தாக்குதல், காயாங்கேணியில் வைத்து வாகரை இராணுவத்தினர் மீது மேற்கொண்ட பதுங்கித் தாக்குதல்கள் போன்ற அதிரடித் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதுடன், அம்பாறை மாவட்டத்திற்குள்ளும் போராட்டம் விஸ்தரிக்கப்பட்டது. இக் காலப்பகுதியில்தான் கஞ்சிக்குடிச்சாறு பகுதியில் தளம் அமைத்து அங்கும் போராட்டச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. 1984ல் மந்த நிலையிலிருந்த போராட்டச் செயற்பாடுகள் மிகவும் குறுகிய காலத்திலேயே தலைவர் அவர்களால் சீர்செய்யப்பட்டு தாக்குதல்கள் நடத்தக்கூடிய அளவுக்கு மேலுயுயர்த்தப்பட்டன. 1985 ஆண்டுக் கடைசிப் பகுதியில் மீண்டும் சிறீலங்கா படைகளைத் தொப்பிக்கல் மலையை நோக்கி வரலாற்றில் முதல் தடவையாக 05 உலங்கு வானூர்திகளைப் பயன்படுத்தி மிகப்பெரும் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து காடுகளுக்குள் பின்வாங்கிய போராளிகள் தொடர்ச்சியாகப் பல கெரில்லாத் தாக்குதல்களை இராணுவத்தினருக்கு எதிராக மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து 1986ம் ஆண்டு தொடக்கத்திலிருந்தும் தொப்பிக்கல், கொக்கட்டிச்சோலை போன்ற பகுதிகள் புலிகளின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன. 1987ல் இந்திய இராணுவக் காலப்பகுதியில் தொப்பிக்கல் பகுதிகளில் இந்திய இராணுவத்தினரால் முதன் முதலாக முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு இராணுவத்தினர் நிலைகொண்டனர். இக் காலப்பகுதியில் போராளிகள் சிறுசிறு குழுக்களாக அப்பகுதிகளில் செயற்பட்டனர். இந்திய இராணுவ வெளியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இரண்டாம் ஈழப்போரைத் தொடர்ந்து 1993 ஆண்டு காலப்பகுதியில் புளட் மோகன், ராசிக்குழு போன்றவர்களின் காட்டிக் கொடுப்புக்களுடன் தொப்பிக்கல் மலைப்பகுதி மீண்டும் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டு அங்கு முகாம்கள் அமைத்து நிலைகொண்டனர். அப்போதும் அங்கு நிலைகொண்டிருந்த பெருமளவிலான போராளிகள் வடக்குநோக்கி நகர்த்தப்பட்டனர். வடக்குநோக்கி நகர்த்தப்பட்ட போராளிகளுக்கு விசேட பயிற்சியும், விசேட ஆலோசனைகளும் தலைமையினால் வழங்கப்பட்டு 1994ம் ஆண்டு மீண்டும் கிழக்கிற்குப் போராளிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். சிறப்புப் பயிற்சிபெற்ற புலிகளின் அணிகளினால் தரவைக்குளம் இராணுவ முகாம் தாக்கி அழிக்கப்பட்டதுடன் பல அதிரடித் தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டன. இதைத் தொடர்ந்து வடபகுதியில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளுக்காக இப் பிரதேசத்திலிருந்து இராணுவத்தினர் பின்வாங்கியதைத் தொடர்ந்து அப்பிரதேசங்கள் முழுவதும் மீண்டும் புலிகளின் ஆளுகைக்குள் கொண்டுவரப்பட்டு அனைத்து நிர்வாக நடவடிக்களும் மேற் கொள்ளப்பட்டன.
ராசிக்குழு, புளட் மோகன் குழு போன்ற துரோகிகள் அழிக்கப்பட்டு மட்டுமண் விடியலின் திசையில் வீறுகொண்டெழுந்தது.
கிழக்கு மண்ணில் தமிழர்கள் பலத்துடன் இருப்பதைச் சீரணிக்க முடியாத சிங்களம் பண ஆசையைக் காட்டி மீண்டும் ஒரு புதிய துரோகியை உருவாக்கித் தமிழரின் பலத்தைச் சிதைக்க முற்பட்டனர். பணம் மற்றும் சிற்றின்பங்களுக்கு விலைபோன துரோகி கருணாவின் காட்டிக் கொடுப்புகளுடன் பாரம்பரியமாக மட்டுமக்களால் பாதுகாக்கப்பட்ட மண் மீண்டும் சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது. சிங்கள இராணுவத்தினாலும், துரோகிகளின் காட்டிக் கொடுப்புக்களினாலும் தொப்பிக்கல பலதடவை ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது. ஓவ்வொரு ஆக்கிரமிப்புக்களும் குறுகிய காலத்திலேயே தோல்வியில் முடிவடைந்துள்ளன. தமிழர்க்கென்று எவ்விதத் தலைமையும் அற்ற காலப் பகுதியிலேயே தமிழர்களின் இப் பூர்விக நிலங்கள் தமிழர்களின் முயற்சியினால் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் இன்று நிலைமை அப்படியல்ல! தமிழர்க்கென்று செயற்திறன் மிக்க வீரமிகு தலைவர் இருக்கின்றார். முப்படையும் கொண்ட சிறப்புப் படைக் கட்டுமானம் உள்ளது. இத் தேசியத் தலைமையின் கீழ் அணிதிரண்டு கிழக்கு மக்கள் சிங்கள இனவாதத்திடமிருந்து தமது பூர்வீக மண்ணை மீட்பார்கள் என்பது உறுதி!

மதப் பிரச்சாரங்கள் மனித ஈடேற்றத்துக்கு வழிவகுக்குமா?

Wednesday, August 29, 2007 - - 2 Comments


ஒவ்வோரு மனிதனும் ஏதோ ஒரு இனம், மதம் சார்ந்தவனாகவும், ஏதோ ஒரு மொழியை தாய் மொழியாக கொண்டவனுமாகவே உள்ளான். இவற்றில் இனமும் மொழியும் பிறப்பின் போது எவ்வாறிருந்ததோ இறப்பு வரைக்கும் அவனது அடையாளமாக, மாற்ற முடியாத ஒன்றாக, என்றைக்கும் நிழல் போல் தொடரும் அம்சங்கள். ஆனால் மதம் அவ்வாறில்லை. மனிதன் தான் விரும்பும் மதத்தை தேர்ந்தெடுத்தது பின்பற்றும் உரிமை அவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. அரசாங்கங்களும் இதற்கு தடைவிதிக்கவில்லை.
இதனையே சாதகமாக்கி, அல்லலுறும் மக்களுக்கு விடுதலை கொடுக்கிறோம் எனும் பெயரில், மதத்தை மூலதனமாக்கி, அதனையே வியாபாரப் பொருளுமாக்கி மக்களை ஏமாளிகளாக்கும் மதவாதிகள் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணமேயுள்ளனர். மாபெரும் எழுப்புதற் கூட்டங்கள் என்ற பெயரில் பூச்சாண்டி காட்டுபவர்கள் ஒரு புறம். வாழும்கலை, தியானம் எனும் பெயர்களில் கூட்டம் சேர்ப்பவர்கள் ஒருபுறம். இங்கே முதற் சாரார் மதத்தைப் பரப்பவும், இரண்டாம் சாரார் மதத்தை தக்கவைக்கவும் பாடுபடுகின்றார்கள். இத்தகையோரின் செயற்பாடுகள் மனிதனுக்கு இயல்பாகவே தோன்றக் கூடிய மதத்தின் மீதான பற்றை, பக்தியை, மரியாதையை வளர்க்கப் பயன்படப்போவதில்லை. மாறாக ஏதோ ஒரு கட்டாயத்தினாலும், கவர்ச்சியினாலும் உந்தப்பட்டு மதம் என்பது தனது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள கையாளும் ஊடகம் எனும் எண்ணத்தை மக்கள் மத்தியில் தோற்றுவித்து இயல்பாகவே இருந்துவந்த மதத்தின் மீதான பற்றையும் மரியாதையையும் கெடுக்கும் வழியே என்பது எனது கருத்து.
நான் எந்த மதத்தையும் சார்ந்தவனல்லன். ஏனெனில் சிந்திக்க ஆரம்பித்த நாள்முதல் ஒரு நாத்திகன். ஆனால் மதங்களுக்கு எதிரானவன் அல்லன். மதங்ளை மதிப்பவன். ஆனாலும் மதவாதிகளின் இத்தகைய, மக்களை பகடைகளாக்கும் செயற்பாடுகள் குறித்து விமர்சிக்காமலிருக்க முடியவில்லை.
டாக்டர் டி.ஜி.எஸ். தினகரன். இவர்தான் உலகளாவிய ரீதியில் நீண்ட நாட்களாக யேசுவை அழைத்துக் கொண்டிருப்பவர். இலங்கையிலும் அடிக்கடி இத்தகைய அழைப்புக் கூட்டங்களை நாடாத்துபவர். இலங்கை ஐனாதிபதி மகிந்த ராஐபக்ச அவர்களுக்கும் இவர் ஆசீர்வாதம் வழங்கியிருந்தார்.அதன்பின்னர் வெளியிட்ட தீர்கதரிசனங்களை "இலங்கைக்காகப் பிரார்த்தனை" எனும் நூலில் காணக்கூடியதாயிருந்தது.
1. இலங்கை தேசத்தின் மீது ஆண்டவர் கிருபை உள்ளவராக மாறுவார். இனி இந்த தேசத்தின் மீது வரப்போவது கோபமல்ல, கிருபையும் ஆசீர்வாதமும்! (உபா 32:43)
2. இனி வரப்போவது அழிவு மழையல்ல, புயல் மழையல்ல, செழிக்கச் செய்யும் மழை (எசே 34:26)!
3. எல்லா தேயிலைத் தோட்டங்களும் செழிக்கும்.
4. இதனால் ஏற்றுமதி ஏராளமாக பெருகும், வருமானம் அதிகரிக்கும்.
5. இலங்கை அரசு பல தேசங்களுடன் தொழில் ஒப்பந்தம் செய்துகொள்ளும். இதனால் பல வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு வந்து பணிபுரியும், வேலை வாய்ப்புகள் பெருகும்இ வேலையில்லாத் திண்டாட்டம் குறையும்.
6. நாட்டின் பெரும் பகுதி வருமானம் பாதுகாப்புக்காக செலவு செய்யப்படுகிறது. இந்த செலவை தேவன் குறைப்பார், அதை நாட்டு மக்களின் நலனுக்காக செலவு செய்வார்கள்.
இவையனைத்தும் ஆண்டவன் அருளியதாக தினகரன் 2006 ஏப்ரலில் வெளியிட்ட தீர்க்கதரிசனங்கள். இவற்றில் ஒன்றாவது தீர்க்கதரிசனத்துக்கமைய இடம்பெற்றதா என்பது அந்த அண்டவனுக்கே வெளிச்சம்.
தீர்க்க தரிசனத்தின் பின்னரான ஒருவருடத்தில் இடப்பெற்றது என்ன? தமிழ்மக்கள் மீதான சிங்களப் பேரினவாதத்தின் ஒடுக்குமுறைகள் நிறுத்தப்பட்டனவா? தமிழருக்கு எதிரான யுத்தத்துக்காக பாதுகாப்புச் செலவு ஒதுக்கீடுதான் குறைக்கப்பட்டதா?
மாறாக மகிந்தவுக்கு வழங்கிய ஆசீர்வாதத்துக்கிணங்க அவர் தமிழர்களை அழிக்கும் பணியை திறம்பட செய்துவருகிறார். அவருக்கு ஆசிவழங்க முன்னர் தினகரன் சில விடயங்களை சிந்தித்திருக்க வேண்டும். மகிந்த அரசின் இன ஒழிப்பின் போது அழிக்கப்பட்ட தேவாலயங்களைப்பற்றியோ அல்லது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பராஜசிங்கம் அவர்களது உயிர் தேவாலயத்தினுள் பிரார்த்தனையின் போது பறிக்கப்பட்டமை பற்றியோ சிந்தித்திருந்தால் தமிழர்களை அழித்தொழிக்கும் பேரினவாத அரசுத் தலைவருக்கு ஆசீர்வாதம் வழங்கியிருக்க மாட்டார்.
தான் சார்ந்துள்ள இனத்தைவிட தான் பரப்பும் மதமே தனக்கு முக்கியம் என உணர்த்தியுள்ளார் தினகரன். எனவே இவரது பிரார்த்தனைகளும், எழுப்புதற் கூட்டங்களும் மக்களுக்கு எந்தவித பயனையும் தோற்றுவிக்காது, தனது மதத்தை பரப்பும் ஓர் முயற்சியாகவே அமையும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
வெறும் ஆசை வார்த்தைகளையும், அற்ப சொற்ப சலுகைகளையும் நம்பி தமது பழமையான, தொன்றுதொட்டு தமது மூதாதையர்கள் கடைப்பிடித்து வந்த மதத்தை விட்டு வேறு மதங்களை கடைப்பிடிப்பவர்களுக்கு இது சமர்ப்பணம்.
மற்றையது வாழும் கலை. வாழும்கலை பயிற்சி என்றால் என்ன? (தெரிந்தவர்கள் தயவு செய்து தெளிய வையுங்கள்.) இந்தப் பயிற்சியில் கலந்து கொள்பவர்களைக் கூட கேட்டுவிட்டேன். அவர்களது பதிலும் எனக்கு திருப்தியாக இல்லை. கொழும்பில் கூட இப்போது இத்கைய பயிற்சிகள் வழங்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. (பயிற்சிக் கட்டணமாக ரூ 2500.00 அறவிடப்படுகிறது.) சமையற்கலை வகுப்புக்கள், சிகை அலங்காரக் கலை வகுப்புக்கள், தையற்கலை வகுப்புக்கள் இவற்றைப்பற்றி எனக்கு நன்கு தெரியும்.
ஆனால் வாழ்க்கையை இவ்வாறுதான் வாழவேண்டும் என வரையறுத்து, அதனைப் பயில்வதற்கு காலம் வரையறுத்து, கட்டணம் அறவிட்டு பயிற்றுவிக்கும் முறையை ஆரம்பித்து வைத்து, புதுமையான வழியில் பணம் சம்பாதிக்கும் முறையை கண்டுபிடித்தவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்களே.
பூமியில் பிறந்துள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் தான் எவ்வாறு வாழவேண்டும் என நன்கு தெரியும். இதுவரைகாலமும் வாழ்ந்து கழித்தவர்கள் எந்தவொரு வாழும்கலை பயிற்சிக்கும் சென்று பயின்றுதான் தமது வாழ்கையை திறம்பட வாழ்ந்து காட்டினார்களா?
சரி. மனிதன் வாழக்கூடிய வாழ்க்கை முறைகளை கூறும் பயிற்சியாக இருப்பின் அதனை கட்டணம் அறவிட்டு பயிற்றுவிப்பதன் நோக்கம் என்ன? ஆக கட்டணம் செலுத்தி பயிற்சியில் கலந்துகொள்பவர்கள் மாத்திரம்தான் வாழ்க்கையில் ஈடேற முடியுமா?
இத்தகைய வழிகளில் மதத்தை வியாபாரமாக்கி, மதத்தின் பெயரால் மக்களிடம் பணம் புரட்டும் மதவாதிகளும், மதத்தை பரப்பும் நோக்கோடு மக்களை பரிதாபத்துக்குரியவர்களாக மாற்றும் தினகரன் போன்ற பிரச்சாரக்காரர்களும் இருக்கும்வரை மதங்களை மரியாதைக்கரிய மதங்களாக மதிக்கும் மனித இயல்பு தொலைந்துபோயிருக்கும் என்பதில் எதுவித ஐயமுமில்லை.